கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புதிதாக நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள மாதானாம் கிராமத்தில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜெயவேல் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜானகிராஜதுரை, மறைத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து, மாணவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில், தடுப்பூசி போட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் உடனடியாக இலவசமாக புதிய புத்தகப்பையுடன் நோட்டுப் புத்தகங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.