மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக் கூடாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல்பர்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் மின்கம்பங்கள் மற்றும் இழுவைக் கம்பிகளில் ஆடு, மாடுகளைக் கட்டவோ, துணிகளை உலர்த்தவோ கூடாது. குழந்தைகளை மின்கம்பம் மற்றும் இழுவைக் கம்பிகள் அருகே விளையாட அனுமதிக்க வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ அல்லது கீழே கிடந்தாலோ அதைத் தொடக்கூடாது. குளம், குட்டை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் மின்கம்பி அறுந்து கிடந்தால் நீரில் இறங்க வேண்டாம். உடனடியாக மின்சார வாரியத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவும்.
இடி, மின்னல், மழையின்போது மின்மாற்றி, கேபிள் கம்பி ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. குறிப்பாக டி.வி., மிக்சி, கிரைண்டர், செல்லிடப்பேசி, கணினி போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும். இடி, மின்னலின்போது வெட்ட வெளியில் யாரும் நிற்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.