நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் விலங்குகளை பாதுகாத்து, அசைவ உணவுகளை தவிர்ப்பது தொடர்பாக பிரமீடு ஆன்மிக மன்ற இயக்கத்தினர் மாணவர்களிடையே புதன்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரமீடு ஆன்மிக மன்ற இயக்கம் சார்பில் விலங்குகளை பாதுகாக்கவும், அசைவ உணவுகளை தவிர்க்கவும், மரங்களை வளர்த்து, புவி வெப்பமயமாதலை தடுப்பது தொடர்பாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆக. 27 -ஆம் தேதி தமிழகத்தில் யாத்திரை தொடங்கிய இந்த குழுவினர் 32 மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து செப். 28 -இல் சென்னையில் நிறைவு செய்கின்றனர்.
வேதாரண்யம் வந்த குழுவினருக்கு வள்ளலார் குடில் அமைப்பின் நிறுவனர் தமிழ்தூதன் தலைமையிலான குழுவினர் வரவேற்பளித்தனர். இந்த குழுவினர், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் மேல்நிலைப்பள்ளிக்கும், அண்டர்காடு சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளிக்கும் சென்றனர்.
பிரசாரக் குழுவின் பொறுப்பாளர் ஆச்சார்யா சீனிவாசன் - திவ்யா தம்பதி, தமிழக பொறுப்பாளர் சுனிதா ஜெகதீஷ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
அவர்களை, குருகுலம் பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி, அலுவலர் ஸ்ரீதர், விவேகானந்த பள்ளி தாளாளர் கு.ப. இளம்பாரதி, முதல்வர் சாய்லதா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், பிரசார குழுவினர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் அசைவ உணவுகளை சாப்பிடுவது நமது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்பது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு, துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.