நாகை மாவட்டத்தில், மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 8 லாரிகளை போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து, இதுதொடர்பாக, 7 பேரை கைது செய்தனர்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் உத்தரவின்பேரில், நாகை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், மங்கநல்லூர் பகுதியில் புதன்கிழமை இரவு போலீஸார் மேற்கொண்ட சோதனையின்போது, அரசலாற்றில் இருந்து அனுமதியின்றி 8 லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 8 மணல் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், லாரிகளின் ஓட்டுநர்களான விழுப்புரம் மாவட்டம், குரும்பகரத்தைச் சேர்ந்த ஏ. சுமன்(40), காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்த எஸ். சுதிஷ்குமார்(36), சித்தனஞ்சேரியைச் சேர்ந்த டி. செந்தில்குமார்(30), மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜி. விக்னேஷ்வரன்(25), மாண்டூரைச் சேர்ந்த வி. யோகானந்தம்(32) மற்றும் எஸ். லோகநாதன்(35) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சோதனைகளின் இடையே, ஒரு மணல் லாரியின் ஓட்டுநர் தப்பியோடியதாகவும், தப்பியோடிய ஓட்டுநரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் எனவும் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.