வேதாரண்யம் அருகே தனித்து வசித்து வந்த வயதான தம்பதியரில், மனைவி இயற்கை மரணமடைந்ததையடுத்து வயதான கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம், தகட்டூர் ஊராட்சி ஆதியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (85). இவரது மனைவி செல்லம்மாள்(75). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளிகளான தம்பதியர் வயதான நிலையில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக செல்லம்மாள் வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் உயிரிழந்தார். வாழ்க்கைத் துணையை பிரிந்த சோகத்தில் வீரன், இரவு சுமார் 9 மணிக்கு பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்தார். இதையடுத்து, வீரனை உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை வீரன் உயிரிழந்தார். இதுகுறித்து, வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார், வீரன் சடலத்தை உடற்கூறாய்வு செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், தம்பதியின் சடலங்களை இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற உறவினர்கள் ஒரே மயானத்தில் தகனம் செய்தனர்.