நாகை சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் நூலகவியல் தேசியக் கருத்தரங்கம் வெள்ளி, சனிக்கிழமையில் (செப். 21, 22) நடைபெற்றது.
அகாதெமிக் நூலகச் சங்கம்- தமிழ்நாடு மற்றும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த.ஆனந்த் தலைமை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிக மேலாண்மைத் துறை பேராசிரியர் எம்.பஞ்சநாதன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகவியல் பேராசிரியர் சீனிவாசராகவன், பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.செல்வநாயகம், திருப்பனந்தாள் கல்லூரி முன்னாள் நூலகர் சம்பத்குமார், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூலகர் எம்.துரைராஜ், தேசியக் கல்லூரி முன்னாள் நூலகர் பி.ராகவன் மற்றும் ஜெயபாலன், சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி முதல்வர்ஆர்.முருகதாஸ் ஆகியோர் நூலகவியல் குறித்துப் பேசினர். தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கே.செந்தில் நாயகம் கெளரவிக்கப்பட்டார்.
இக்கருத்தரங்கில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து நூலகர்கள், முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.அகாதெமிக் நூலகச் சங்கத் தலைவர் பி.கணேசன் வரவேற்றார்.நிறைவில் சங்க செயலாளர் எம்.சங்கர் நன்றி கூறினார்.