நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பாஜக சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 102-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் பாஜகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தீனதயாள் உபாத்யாயவின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது.
பாஜக நகர தலைவர் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், மாவட்டப் பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு, மாநிலப் பொறுப்பாளர் சுப்பிரமணிய. சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.