வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு, சிந்தாமணிக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.
கொளுத்தும் வெயிலில் வாக்களித்துவிட்டு வந்த பெண், சிறிதுநேரம் ஓய்வுக்காக வீட்டில் படுத்திருந்தபோது இந்த துயரம் நேரிட்டது. வேதாரண்யம் அருகே உள்ள சிந்தாமணிக்காடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையன் மனைவி காசியம்மாள் (60). சுப்பையன் இறந்து விட்ட நிலையில், அரசுக் கட்டிக் கொடுத்த தொகுப்பு வீட்டில் காசியம்மாள் வசித்துவந்தார். இந்த வீடு ஏற்கெனவே பழுதடைந்திருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பகலில் கொளுத்தும் வெயிலில் அருகில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்று, நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்துவிட்டு வந்த காசி யம்மாள், அசதியில் ஓய்வுக்காக வீட்டில் படுத்திருந்தார். அப்போது, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், நிகழ்விடத்திலேயே காசியம்மாள் உயிரிழந்தார்.
வாய்மேடு போலீஸார், காசியம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.