நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம், பிரதாபராமபுரம் ஊராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதாபராமபுரம் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஊராட்சியாகும். இவ்வூரின் பிரதான இணைப்புச் சாலையான சந்திரநதி சாலை (கல்லறை சாலை) கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்படுத்தப்படாமல் உள்ளது.
ஊராட்சியின் பிரதான இணைப்புச் சாலையாக உள்ள இந்த சாலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, நடுநிலைப்பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. இதனால் சந்திரநதி சாலையில் எந்நேரமும் மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித சீரமைப்புப் பணியும் நடைபெறாததால் சாலையில் பெரிய, சிறிய பள்ளங்கள் உருவாகி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அ ரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் தாய்மார்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிராம மக்களின் நிலையைக் கருதி சுமார்
3 கிலோ மீட்டர் தூரமுள்ள சந்திரநதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.