நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சனிக்கிழமை கடலில் மிதந்து வந்த கப்பல் பயன்பாட்டுக்கான மிதவை சாதனம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த புதுப்பள்ளி கடலோரக் கிராமத்தின் வழியே கடலில் இணையும் சக்கிலியன் வாய்க்கால் பிரதான வடிகால் ஆற்றின் கழிமுகத்தில் சுமார் 150 மீட்டர் தொலைவு கடல் பரப்பில், கோபுர வடிவத்தில் மர்மப் பொருள் மிதந்ததை அந்த பகுதி மக்கள் சனிக்கிழமை பார்த்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸார், கீழ்வேளூர் கடலோரக் காவல் நிலைய போலீஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று, கரை ஒதுங்கிய மர்மப் பொருளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.சுமார் 15 அடி உயரத்திலான இந்த சாதனத்தின் அடிப்பகுதி சுமார் 3 மீட்டர் விட்ட அளவில் மிதவைக்கான வாயு நிரப்பப்பட்ட உருளை வடிவில் அமைந்துள்ளது. இது, ஆழ்கடலில் கப்பல்கள் சரியான தடத்தில் செல்ல வழிகாட்டும் வகையில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்படும் மிதவை என்பது தெரியவந்தது. ஆழ்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இந்த சாதனம் அறுந்து
கரை ஒதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.