கஜா புயல் நிவாரணம் கோரி போராட்டம் நடத்திய கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், கிராமப்புற ஏழைகளும் தங்கள் வீடுகள், மரங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளை இழந்து வேதனையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். கஜா புயலுக்கு பிந்தைய நிலைமையை ஜன.13-ஆம் தேதி பார்வையிட்டோம். கஜா புயலின்போது சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 44 பேரில், 39 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது சம்பந்தமில்லாத பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு இன்னமும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்குவதில், போராட்டம் நடத்திய கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் ரெளடிகளை வைத்து தலித் மக்களைத் தாக்கிய அமைச்சர் ஓ.எஸ். மணியன் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவதோடு அமைச்சர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.
அப்போது, சங்கத்தின் பொதுச் செயலாளர் என். குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நாகை, தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.