அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பலன்கள் சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மக்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தில்லியில் பிரதமரின் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் ஆலோசனை குழுவினரிடம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியபோது மோடி இவ்வாறு கூறினார். பொதுவாக மத்திய அரசு முன்னெடுக்கும் அறிவியல் சார்ந்த திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை பிரதமருக்கு அந்தக் குழு அளிக்கும். அதுமட்டுமன்றி, அறிவியல் சார்ந்த திட்டங்களை செயல்படுத்திய பிறகு அதனை கண்காணிக்கும் நடவடிக்கைகளிலும் அக்குழு ஈடுபடும்.
இந்த நிலையில், அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுடன் பிரமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கியதாகத் தெரிகிறது.
இதனிடையே, தற்போது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்து அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மோடியிடம் விளக்கமளித்தது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மோடி பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
வளர்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் வெவ்வேறு தளத்தில் இருந்து கண்டறிய வேண்டும். அப்போதுதான் திறன் மிக்க மாணவர்களையும், இளைஞர்களையும் அடையாளம் காண இயலும். பொதுவாக, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது பாமர மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருத்தல் அவசியம். அதை அடிப்படையாக வைத்து அறிவியல் அறிஞர்கள் செயல்பட வேண்டும். மக்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் நோக்கிலான கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதுமட்டுமன்றி, ஆய்வுக் கூடங்கள், அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து ஆராய்ச்சியாளர்கள் பணியாற்ற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடையே தகவல் பரிமாற்றங்களில் இருக்கும் தடைகள் அகல நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார் பிரதமர் மோடி.
இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.