வடகிழக்கு தில்லியில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்தவர் படுகாயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
வடகிழக்கு தில்லி, பஜன்புரா பகுதியில் ஷாபாஸ் என்பவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சம்பவத்தன்று பஜன்புரா காவல் நிலைய போலீஸார் சோதனை நடத்த சென்றனர். போலீஸார் சோதனை நடத்த அவரது வீட்டுக்குள் நுழைந்த உடனேயே, அவர் இரும்புப் படிக்கட்டைப் பயன்படுத்தி மாடிக்குச் சென்று, அங்கிருந்து பக்கத்து கட்டடத்திற்கு தாவ முயன்றார். அப்போது, அந்தக் கட்டடத்தில் தவறி கீழே விழுந்தார். அவர் விழுந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் அங்கு திரண்டு போலீஸாரை முற்றுகையிட்டனர். ஷாபாஸுக்கு மார்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அதில் காவலர் ஒருவர் ஷாபாஸின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியுடன் இருப்பதும், மற்றொரு விடியோவில் ஷாபாஸை போலீஸார் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக உள்ளூர்வாசிகள் முற்றுகையிடுவதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வடகிழக்கு காவல் துணை ஆணையர் அதுல் தாக்குர் கூறுகையில் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக காயமடைந்தவரின் குடும்பத்தினர் போலீஸாருக்கு எதிராக புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றாலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.