தில்லியை நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி அரசு, தில்லியில் நிலவும் காற்று மாசைத் தடுக்கத் தவறிவிட்டதாக, பாஜகவின் தில்லி பிரதேச தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தில்லியில் காற்று மாசு தொடர்ந்து கடுமையான பிரிவில் நீடித்து வருகிறது. நச்சு மாசுகள் கலந்த காற்றை சுவாசிக்க தில்லி மக்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
தில்லி காற்றை ஒரு நாள் சுவாசிப்பதும் 60 சிகரெட்டுகளை பிடிப்பதும் சமமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி அரசு காற்று மாசைக் குறைக்க பல திட்டங்களை அறிவித்தது. ஆனால், அதில் எந்தவொரு திட்டத்தையும் அது செயல்படுத்தவில்லை.
மேலும், "சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடன் சாலைகள் சுத்தம் செய்யப்படும், சாலைகளுக்கு நீர் தெளிக்கப்படும், காற்றை சுத்தப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படும்' உள்ளிட்ட பல வாக்குறுதிகளை தில்லி அரசு வழங்கியது.
ஆனால், அதில் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால், தில்லியில் ஆஸ்துமா, இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக தில்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு தில்லியில் நிலவும் காற்று மாசைக் குறைக்கத் தவறிவிட்டது என்றார் அவர்.