ஒரே நபருக்கு பல ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், ஓட்டுநர் உரிமங்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்றை அரசு கட்டமைத்து வருவதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். சாலைப் பாதுகாப்புக்கான பேரியக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கட்கரி பேசியதாவது:
இந்தியாவில் தற்போது ஓட்டுநர் உரிமம் பெறுவது மிக எளிதான நடவடிக்கையாக உள்ளது. சில நபர்கள், வெவ்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். எனவே, ஒரே நபருக்கு பல ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக, ஓட்டுநர் உரிமங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
ஓட்டுநர் உரிமம் கோரும் நபர்கள் உரிய தேர்வு மற்றும் சோதனைக்கு உள்படுத்தப்படாத காரணத்தாலேயே அதிகமான சாலை விபத்துகள் நேர்கின்றன. அதைத் தடுக்கும் வகையில் பல ஓட்டுநர் பயிற்சியாளர் மையங்களை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் சுமார் 22 லட்சம் ஓட்டுநர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது.
எனவே, இளைஞர்களுக்கான அந்த வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வகையில், ஓட்டுநர் இல்லா கார்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உலகளவில் இந்தியாவிலேயே அதிகமாக சாலை விபத்துகள் நேர்கின்றன. புள்ளி விவரத்தின்படி, நாட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.
சாலைகள் கட்டமைப்பில் திருத்தம், ஓட்டுநர்களுக்கு உரிய பயிற்சி, வாகனங்களின் வடிவமைப்பை பாதுகாப்பானதாக்குதல், பிரச்னைக்குரிய பகுதிகளை கண்டறிதல் என, சாலை விபத்துகளை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நிதின் கட்கரி பேசினார்.