தில்லி புறநகர்ப் பகுதியான மியான்வாலி நகரில் பூட்டிய வீட்டுக்குள் தாய், மகள் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தது சனிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: மியான்வாலி நகரில் வசித்து வந்தவர் ஷாஷி தால்வார் (60). அவரது மகள் நிதி (40). இவர் மாற்றுத் திறனாளியாவார். ஷாஷி தால்வாரின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வீட்டில் தாயும் மகளும் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில், வழக்கம் போல வீட்டுப் பணிப்பெண் சனிக்கிழமை காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். மணி ஒலிப்பானை பல முறை அழுத்தியுள்ளார். ஆனால், எந்தப் பதிலும் வராததால், வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்றுள்ளார். அப்போது, ஷாஷி தால்வரும், நிதியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டார். இதையடுத்து, காலை 10 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் நகை, பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை. ஓர் அறையில் தேநீர் குவளைகள் கிடந்தன.
இதனால், அக்குடும்பத்துக்கு அறிமுகவானவர்கள்தான் அவர்களை தாக்கிக் கொன்றிருக்கக் கூடம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.