ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தில்லியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் கேசவ் சந்த் யாதவ் தலைமையேற்றார். அவர் பேசியதாவது:
தனது நெருங்கிய நண்பர் அனில் அம்பானி ஆதாயம் பெறும் வகையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். பிரான்ஸ் நாளிதழ்களில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தை போர் விமான உதிரி பாகங்களை தயாரிக்க டஸால்ட நிறுவனத்துடன் கூட்டாளியாக்குமாறு இந்திய அரசு பரிந்துரைத்தது. எங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தைத் தானே நாங்கள் தேர்வு செய்ய முடியும்.
எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தை விமான தயாரிப்பில் பங்கேற்க செய்தோம் என்று பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் தனிப்பட்ட முறையில் திரைமறைவில் பேரம் பேசி முடித்துள்ளது தெளிவாகிறது. இந்த விவகாரத்தில் நாட்டின் பாதுபாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ரஃபேல் விவகாரத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலர் அமித் யாதவ், தில்லி பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் விகாஸ், பொதுச் செயலர் பிரதீபா ரகுவன்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராய்ஸீனா சாலையிலிருந்து பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட்ட இளைஞர் காங்கிரஸாரை தில்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.