வடக்கு தில்லியின் ஜகத்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 வழிச் சாலை மேம்பாலம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் புற வட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 1.2 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தை, தில்லி பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சனிக்கிழமை திறந்துவைத்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பங்கஜ் புஷ்கர், சஞ்சீவ் ஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக தில்லி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள் நெருக்கடி அதிகம் கொண்ட ஜகத்பூர், சங்கம் விஹார், வாஜிராபாத், ஜரோடா, நாதுபுரா, சந்த் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து புற வட்ட சாலைக்கு வரும் வாகனங்களுக்கு, புதிய மேம்பாலம் மிகவும் வசதியாக இருக்கும். மேலும், சுமார் ரூ.72 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இப்பாலத்தின் பணிகள், கடந்த 2014, பிப்ரவரியில் தொடங்கின. கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மேம்பாலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இப்பாலத்தால் புறவட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் நாளொன்றுக்கு 2 டன் என்ற அளவில் கரியமில வாயு வெளியேற்றமும் குறையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.