முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொதுச் செயலாளர் தாமோதர கிருஷ்ணன் மீதான வழக்கு தொடர்பாக அவரது மனைவி டி. லாவண்யா (43) தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (என்எச்ஆர்சி) அளித்த புகாரை அவசரமாக விசாரிக்க உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றதில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஏ. ராஜராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"அதிமுக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, நடைபெற்ற குதிரை பெற ஊழலை வெளிக்கொண்டு வருவேன்' என்று தனது கணவரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொதுச் செயலாளருமான தாமோதர கிருஷ்ணன் கூறினார். இதைத் தொடர்ந்து, அவரை முடக்கும் நோக்கிலும், காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனும் பொய் வழக்கு போட்ட தி. நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தனுக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி அளித்த புகாரை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்.
மேலும், தனது கணவருக்கு எதிரான வழக்கின் கோப்புகளை வேறு ஒரு நேர்மையான அதிகாரிகக்கு மாற்ற சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு இடைக்கால உத்தரவிட வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கடந்த 18-ஆம் தேதி அளித்த மனுவின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.