தில்லி கிரிக்கெட் மாவட்டச் சங்கத்தில் (டிடிசிஏ) ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், கிரிக்கெட் வீரரும் முன்னாள் பாஜக எம்பியுமான கீர்த்தி ஆசாத்தும் திரும்பப் பெற்றதையடுத்து அவர்கள் மீதான அவதூறு வழக்கை டிடிசிஏ திரும்பப் பெற்றது. இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
டிடிசிஏ தொடுத்திருந்த அவதூறு வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வழக்குரைஞர் அனுப்பம் ஸ்ரீவஸ்தா ஆஜராகி, டிடிசிஏ மீது தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை கேஜரிவால் திரும்பப் பெறும் கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதேபோல், கீர்த்தி ஆசாத்தும் தனது குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டிருந்த கடிதத்தை அவரது வழக்குரைஞர் தாக்கல் செய்தார். என்ன காரணத்துக்காக இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுகிறார்கள் என்பதற்கான விளக்கத்தை நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, இருவர் மீதும் தலா ரூ. 2.5 கோடி கேட்டு தொடுத்திருந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக டிடிசிஏவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரதீப் சிந்திரா கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.