புல்வாமா தாக்குதல்: ம.பி., பஞ்சாப் பேரவைகளில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. 
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான திங்கள்கிழமை மறைந்த முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் கோவா ஆளுநர் பானு பிரகாஷ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஜிதேந்திர சிங் பண்டேலா, ஞானஷிய படீதார், லோகேந்திர சிங் தோமர், மோகன்சிங் பண்டேலா, கிருஷ்ண வல்லவ குப்தா ஆகியோரின் மறைவுக்கும் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பேரவைத் தலைவர் நர்மதா பிரசாத் பிரஜாபதி ஜார்ஜ் பெர்னாண்டஸ், மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். 
இதைத்தொடர்ந்து முதல்வர் கமல்நாத், மறைந்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும், கோவா முன்னாள் ஆளுநர் சிங்குக்கும் இடையிலான தனது நட்பை நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மிகக் கொடூரமானது. வீரர்கள் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரைத் தந்து தியாகம் செய்ததை யாராலும் மறக்க முடியாது. ஜாதி, மதம் என மக்கள் பிரிவுற்றபோதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் மக்கள் எப்போதும் ஒற்றுமையுடனேயே திகழ்வார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா பேசியதாவது: மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிக அரிதான அரசியல்வாதி. தொழிற்சங்க தலைவராக தனது வாழ்வை தொடங்கி பின்னாளில் நாட்டின் எந்தப்பகுதியில் தேர்தல்களத்தில் நின்றாலும் வெற்றி பெறும் அளவுக்கு முன்னேறினார். கர்நாடகத்தில் பிறந்து, மகாராஷ்டிரத்திலும், பிகாரிலும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில்  வெற்றி பெற்று சாதித்தவர். 
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தை எதிர்த்து அரசு மேற்கொள்ளும் முடிவுக்கு மக்கள் துணை நிற்பதும்தான் தற்போதைய முக்கியத் தேவை. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். 
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் சிவராஜ் செளகான் மற்றும் முதல்வர் கமல்நாத் ஆகியோர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டன. 
பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அத்தாக்குதலில் இறந்து போன 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு உதவும் வகையில் மாநில எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்தனர். 
இதுதொடர்பாக, திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை காங்கிரஸ் எம்எல்ஏ பர்மீந்தர் சிங் பிங்கி கொண்டு வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com