பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத பள்ளி இடங்களை அளிக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை (ஆர்டிஇ), தில்லியில் உள்ள 80 சதவீத தனியார் பள்ளிகள் அமல்படுத்துவதில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
"இன்டஸ் ஆக்ஷன்' எனும் தொண்டு நிறுவனம் 10,000-க்கும் மேற்பட்டவர்களிடம் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது. அந்த அறிக்கையின் சாரம்சம் தில்லியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அதில், " 13 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம், கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எத்தனை மாணவர்கள் எத்தனை பள்ளிகளில் பயில்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் உடனடியாக இல்லை. கல்வி உரிமைச் சட்டம் முழு வீச்சில் அமல்படுத்தாததற்கு அந்த மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் காரணமாக உள்ளது.
சில மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள். 8-ம் வகுப்புக்கு பிறகு மாணவர்களுக்கு ஆதார் போன்ற ஆவணங்கள் கட்டாயமாக கேட்கப்படுவதால், இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் திட்ட அமலாக்கத்தில் தெளிவற்றநிலை உள்ளது.
தில்லியில் மட்டும் 80 சதவீத தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் ஈடுபாடு காட்டுவதில்லை' என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் முழு விவரம் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.