தில்லியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். மூன்று வயது ஆண் குழந்தை படுகாயமடைந்தது.
இச்சம்பவம் குறித்து தில்லி காவல் துறையின் ரோஹிணி பிரிவு துணை ஆணையர் உயர் எஸ்டி மிஸ்ரா கூறியதாவது:
ரோஹிணி செக்டார் 15-இல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மணல் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதேபகுதியில் காரும் வந்துகொண்டிருந்தது. கே.என். கட்ஜு மார்கில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை அருகே இரு வாகனங்களும் விபத்துக்குள்ளாகின.
இது குறித்து போலீஸாருக்கு புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில், மணல் லாரி திருப்பத்தில் திரும்பியபோது கார் மீது கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுமித் (29), அவரது தாய் ரிது (59), மனைவி ருச்சி (27) ஆகியோர் உயிரிழந்தனர். மூன்று வயது ஆண் குழந்தை படுகாயமடைந்தது. அக்குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நால்வரும் காரில் வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.டிப்பர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் எஸ்டி மிஸ்ரா.