மேற்கு தில்லி, பஞ்சாபி பாக் பகுதியில் மோட்டார்சைக்கிள் மீது வேகமாகச் சென்ற கார் மோதிய விபத்தில், இருவர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களின் பெயர், ரவீந்தர், ரோஹித் என அடையாளம் காணப்பட்டது. இவர்கள் இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் முர்தால் பகுதியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து அவர்கள் அதிகாலை 2.30 மணியளவில் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று, பலத்த காயமடைந்த நிலையில் இருந்த ரவீந்தர், ரோஹித் ஆகிய இருவரையும் மீட்டு பஸாய் தாராபுரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், இருவரும் மெக்டொனால்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், வேலை முடிந்து முர்தாலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த கார் தங்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியதாகத் தெரிவித்துள்ளனர்.
கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இந்த விபத்தின் போது, காரின் நம்பர் பிளேட் உடைந்து சாலையில் விழுந்துள்ளது.
அந்தக் கார் மஞ்சித் சிங் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அவர் அம்பிகா விஹாரைச் சேர்ந்தவர். அந்தக் காரை அவரது மகன் ககன்தீப் (28) ஓட்டியுள்ளார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.