தில்லி பாஜக இளைஞர் அணி சார்பில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தில்லி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி, இளைஞர் அணித் தலைவர் சுனில் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மனோஜ் திவாரி அளித்த பேட்டி: 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி தில்லி பாஜகவின் பூர்வாஞ்சல் பிரிவு, மகளிர் அணி, ஒடுக்கப்பட்டோர் அணி ஆகியவற்றின் சார்பில் தில்லி ராம்லீலா மைதானத்தில் முன்பு பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், தில்லி பாஜக இளைஞர் அணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா வலிமையான நாடாக மாறி வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தில்லி மக்கள் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பார்கள். இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மோடியை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் என சபதம் எடுக்கவுள்ளனர்.
இந்தப் பேரணியில் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், பாஜக இளைஞர் அணித் தலைவர் பூனம் மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் அவர்.
சுனில் யாதவ் பேசுகையில், மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத் திட்டப் பணிகளை இந்தப் பேரணியில் எடுத்துக் கூறவுள்ளோம். மேலும், வரும் பிப்ரவரி 2- ஆம் தேதி மத்திய அரசின் மக்கள் நலத் திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், பிரமாண்ட மோட்டார்சைக்கிள் பேரணி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது என்றார் அவர்.