திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதையடுத்து, குமரி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை வந்து திரும்பிச் சென்றன.
சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் எனவும், பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும் கேரள மாநில பாஜக பொதுச் செயலர் ஏ.என். ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் கடந்த 9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அக்கட்சியினர் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் கேரள போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைக் கண்டித்து அம் மாநில பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாறசாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கேரள அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை வரை வந்து திரும்பிச் சென்றன.