குலசேகரம் அருகே கவிஞர் தும்பகோடு ஏ. சந்திரசேகரன் நாயரின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கவிஞர் தும்பகோடு ஏ. சந்திரசேகரன் நாயர், மலையாள மொழியில் ஏராளமான கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி புகழ் பெற்றவர். இவரது 10 ஆவது ஆண்டு நினைவேந்தலும், இவரது பேரன் ஷெமின் பாலசந்திரன் நாயர் இயக்கியுள்ள டைட் ஆப் லைஸ் என்ற ஆங்கிலப் படத்தின் சுவரொட்டி வெளியீட்டு விழாவும் திருநந்திக்கரை நேதாஜி நினைவு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நேதாஜி நினைவு நூலகத் தலைவர் ஆர். சுந்தரேஷன் தலைமை வகித்தார். கவிஞர் ஏ. சந்திரசேகரன் நாயர் படத்திற்கு சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தலைவர் சி.கே. மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கேரள மொழியியல் துறை ஆராய்ச்சி அலுவலர் பிஜு பாலகிருஷ்ணன் நினைவேந்தல் உரையாற்றினார்.திரைப்பட சுவரொட்டியை ஓவியரும், கலை இயக்குநருமான மார்த்தாண்டம் ராஜசேகரன் வெளியிட்டார்.
எழுத்தாளர் பொன்மனை வல்சகுமார், தமுஎகச மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், மாவட்டச் செயலர் ஜே.எம்.ஹசன், திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். கிராம வளர்ச்சி மைய செயலர் பி. ஷீஜா சந்திரன் வரவேற்றார். தமுஎகச கிளைத் தலைவர் ஆர். வினோத் நன்றி கூறினார்.