குமரி மாவட்டத்தில் பலத்த மழை: முக்கடல் அணை நிரம்பியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை வியாழக்கிழமை நிரம்பியது.
கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் மழை பெய்யத்தொடங்கியது. நாகர்கோவில் நகரில் புதன்கிழமை பிற்பகல் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டாறு, செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
மழை வெள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி வெள்ளத்தில் மிதந்து சென்றன. இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த மழை நீடித்தது.
இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக முக்கடல் பகுதியில் 64.7 மி.மீ. மழை பதிவானது. இதனால் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் வியாழக்கிழமை காலை தனது முழுக்கொள்ளளவான 25 அடியை எட்டியது. இதனால் மறுகாலில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்துவருகிறது.இதன்மூலம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27.15 அடியாக உள்ளது. அணைக்கு 546 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து 507 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 199 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து 245 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்):
நாகர்கோவில்- 27.8, மாம்பழத்துறையாறு அணை- 27, புத்தன் அணை - 23.4, அடையாமடை- 23, பெருஞ்சாணிஅணை- 22, ஆனைக்கிடங்கு - 18, பாலமோர் - 15.2, சுருளகோடு- 13.4, பேச்சிப்பாறை அணை - 12, திற்பரப்பு - 4.8, சிற்றாறு 2 அணை - 3.6, பூதப்பாண்டி - 2.8, சிற்றாறு 1 அணை - 2.6, கன்னிமார்- 2.6.