கருங்கல் அரசு மருத்துவமனையில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கருங்கல் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் 25-க்கு மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இம்மருத்துவமனையில் கட்டில், படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை, அறைகள், கழிவறை மற்றும் மருத்துவமனையின் சுற்றுவட்டாரப் பகுதிகள் தூய்மையின்றி இருப்பதாக கிள்ளியூர் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து சனிக்கிழமை கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தலைமையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன், இணை இயக்குநர் வசந்தா ஆகியோர் கருங்கல் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது மருத்துவமனையில் போர்வை, தலையணை போன்றவை மாதக்கணக்கில் சலவை செய்யாமல் பயன்படுத்துவதைக் கண்டறிந்த எம்எல்ஏ ஊழியர்களிடம் கடிந்து கொண்டார். மேலும், சலவை இயந்திரம், புதிய போர்வை, தலையணை உள்ளிட்டவற்றை தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் நோயாளிகள் நலச் சங்கம் மூலம் உடனடியாக வாங்கிச் சீரமைக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு வந்து நோயாளிகளுக்கு முறையாக சிசிச்சை அளிக்கவேண்டும் எனவும் இணை இயக்குநர் வசந்தாவிடம் அறிவுறுத்தினார்.
இதில், மருத்துவர் வினிஷா, கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சர்மிளா ஏஞ்சல், கிள்ளியூர் வட்டாக சுகாதார மேற்பார்வையாளர் ஐயப்பன், சுகாதார ஆய்வாளர் முருகன், செவிலியர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.