கேரளத்தில் சனிக்கிழமை இந்து இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் சென்ற அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை இயக்கப்பட்டது.
சபரிமலை கோயிலுக்கு இருமுடிக் கட்டுடன் சென்ற இந்து ஐக்கிய வேதி அமைப்பின் கேரள மாநில தலைவி சசிகலாவை அம்மாநில போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, கேரளத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் "பந்த்' அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதையொட்டி, நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை வந்து திரும்பின. பாறசாலை வழியாக பனச்சமூடு, கொல்லங்கோடு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டன.
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பாறசாலை, அதையொட்டிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளம் சென்ற சொகுசு கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் மருத்துவமனை, விமான நிலையம் என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டன.