கன்னியாகுமரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 6.70 லட்சம் நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் சனிக்கிழமை வழங்கினார்.
குமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் முருகன். இவர், கடந்த 5ஆம் தேதி பணி நிமித்தமாக சுசீந்திரத்தில் இருந்து வரும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு, குமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சார்பில், ரூ. 6 லட்சத்து 70 ஆயிரத்து 600 நிதி திரட்டப்பட்டது.
இந்த நிதியை விபத்தில் பலியான தலைமைக் காவலர் முருகனின் மனைவியிடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.