கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து தில்லிக்குச் செல்லும் ஆரோக்கிய பாரதம் சைக்கிள் பயணத்துக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த தினத்தையொட்டி நாட்டின் 6 இடங்களிலிருந்து அக். 16 ஆம் தேதி தொடங்கிய சைக்கிள் பயணம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தில்லியில் நிறைவடைகிறது. பிரதமர் நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்ட ஆரோக்கிய பாரத பயணம் என்ற இந்த சைக்கிள் பயணத்துக்கு மாவட்ட உணவு பாதுக்காப்புத் துறை சார்பில் களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரத்திலிருந்து கேரள உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அனில்குமார் தலைமையில் 60 பேர் சைக்கிள் பயணமாக வந்தனர்.
இவர்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாக ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தில்லி சென்றடைகிறார்கள்.
இந்த சைக்கிள் பயணத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, உணவு பாதுகாப்புத் துறை சார்பிலான சீருடை வழங்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கருணாகரன், விளவங்கோடு வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சைக்கிள் பயணம் களியக்காவிளையில் இரு நாள்கள் தங்கி, இங்கிருந்து வெள்ளிக்கிழமை காலையில் புறப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.