கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரகோவிலில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் (என்.ஐ.) பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் எம்.எஸ். பைசல் கான், ஹைதராபாத்தில் உள்ள மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையான நிம்ஸ் மெடிசிட்டி நிறுவனத்தின் இயக்குநராகவும் பைசல் கான் பணியாற்றி வருகிறார்.
மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை சார்ந்த பாடத்திட்டங்கள், பணி நியமனங்கள், பணிகளை ஒதுக்கீடு செய்தல், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவை இந்த ஆட்சிமன்றக் குழுவின் முக்கிய பணியாகும்.
பைசல் கானை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத் கான், துணைவேந்தர் ஆர். பெருமாள்சாமி, பதிவாளர் திருமால்வளவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.