மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய மினிலாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை குளக்கச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சிலர் செம்மண் எடுத்து மினிலாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனராம். போலீஸாரை கண்டதும் அங்கு நின்றவர்கள் தப்பியோடி விட்டனராம்.
இதைத் தொடர்ந்து செம்மண் கடத்த பயன்படுத்திய மினிலாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து மினிலாரி ஓட்டுநர் உள்பட இருவர் மீது மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.