கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் பேப்பரால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்கண்காட்சியில் கப், தட்டு, பை, பென்சில் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: தமிழக முதல்வர் 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பை அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பேப்பரால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இதுபோன்ற கண்காட்சி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும். பிளாஸ்டிக் பொருள்களை அறவே ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார் அவர்.
ஆய்வின் போது, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, உதவி ஆட்சியர் பிரதீப் தயாள், நாகர்கோவில் கோட்டாட்சியர் வீராச்சாமி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் அனில்குமார், தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலகிருஷ்ணன், அரசு பழத்தோட்ட மேலாளர் சரவணன், துணை மேலாளர் மணிகண்டன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான் ஆகியோர் உடனிருந்தனர்.