நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை அடுத்த கீழ சரக்கல் விளையைச் சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி சகானா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வமும், சகானாவும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு செல்வம் கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றாராம். பின்னர் அவர் நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, சரக்கல்விளை அருகே அவரை வழிமறித்து ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாறு போலீஸார் செல்வத்தின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக செல்வம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். செல்வத்தை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.