கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
கருங்கல் அருகேயுள்ள பூட்டேற்றி கொசவன்விளையைச் சேர்ந்தவர் சபரிமுத்து (65), பேட்டரி கடை நடத்திவந்தார். காஞ்சிரக்கோட்டுவிளையைச் சேர்ந்தவர் தொபியாஸ் (47). கூலித் தொழிலாளி. சபரிமுத்து வெள்ளிக்கிழமை இரவு ஆலயத் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, அங்கு நின்றிருந்தார். அப்போது அவரிடம் தொபியாஸ் தகராறு செய்து, கல்லால் தாக்கினாராம். இதில், சபரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஊர்மக்கள் திரண்டு தொபியாஸை பிடிக்க முயன்ற போது, அவர் தனது வீட்டில் பதுங்கியதுடன், பிடிக்க முயன்றோரை அரிவாளைக் காட்டி மிரட்டினாராம். தக்கலை டி.எஸ்.பி. கார்த்திகேயன், குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக், கருங்கல் ஆய்வாளர் ஸ்ரீதர், போலீஸார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்; வீட்டில் பதுங்கியிருந்த தொபியாஸை கைது செய்தனர்.
தொபியாஸ் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக சபரிமுத்து தெரிவித்த புகாரின்பேரில் ஊர் நிர்வாகம் தொபியாஸை கண்டித்ததால் அவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.