கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அரசுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த 64 காவல் உதவி ஆய்வாளர்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 14 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி காவல் ஆய்வாளர்கள் ஜெயசந்திரன் (கன்னியாகுமரி), ஸ்ரீதர் (புதுக்கடை), முத்துராஜ் (ராஜாக்கமங்கலம்) மற்றும் பரத் ஸ்ரீனிவாஸ், சேம் வேதமாணிக்கம் ஆகிய 5 பேரும் மதுரை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தங்கம் (குலசேகரம்), செல்வம் (சுசீந்திரம்), முத்துராமன்(குளச்சல்), சுதேசன் (இரணியல்), சிவசங்கரன் (பூதப்பாண்டி), ஜெயலட்சுமி (ஆரல்வாய்மொழி ), சாய்லட்சுமி ( நேசமணி நகர்), அந்தோணியம்மாள் (நித்திரவிளை) ஆகியோர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர் பிறப்பித்துள்ளார்.