ஜெயலலிதாவின் பிறந்ததினத்தையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள், கோயில்களில் அன்னதானம் வழங்குவது என தோவாளை ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வடக்கூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்துக்கு அவைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலரும், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவருமான எஸ். கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். துணைச்செயலர் அய்யப்பன் வரவேற்றார். குமரி கிழக்கு மாவட்டச் செயலரும், ஆவின் தலைவருமான எஸ்.ஏ. அசோகன் பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்ததினத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், தோவாளை கிருஷ்ணசாமி கோயில்களில் அன்னதானம் வழங்குவது, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தேரூரில் மணிமண்டபம் அமைக்க உத்தரவு பிறப்பித்து ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர், உறுதுணையாக இருந்த தில்லி சிறப்புப் பிரதிநிதி, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்டச் செயலர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது;
மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி செயலர்களுக்கு ஒன்றிய அதிமுக சார்பில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாவட்டத் துணைச்செயலர் லதாராமச்சந்திரன், பொருளாளர் திலக், ஒன்றிய இணைச் செயலர் ரமணி, பொருளாளர் தென்கரை மகாராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.