கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வந்த கேரளத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இம்மாவட்டத்தில், அதிகளவில் போலி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையே, மது விலக்கு போலீஸார் வியாழக்கிழமை ரோந்து பணியின்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறித்து சோதனையிட்டனர். அப்போது, அவர் 50 போலி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கேரள மாநிலம், நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த சஜூ என்ற சந்தோஷ் குமார்( 30) என்பதும், ஏற்கெனவே போலி மதுபாட்டில்களை விநியோகம் செய்ததாக உள்ள வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் என்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.