மார்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை இரவு திக்குறிச்சி - பயணம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த போலீஸார் சைகை காட்டினர்.
இதையடுத்து காரை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு காரில் வந்த 3 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீஸார் 3 பேரையும் துரத்திப் பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனையிட்டதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 13 பிளாஸ்டிக் கேன்களில் 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, மண்ணெண்ணெய்யுடன் காரையும் பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட 3 பேருடன் காவல் நிலையம் வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மார்த்தாண்டம் அருகேயுள்ள பயணம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (45), சுந்தர்ராஜ் (40), திக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (28) என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நாகர்கோவிலில் உள்ள உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.