கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்றும் முனைய எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டம் முகிலன்குடியிருப்பில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் பிரபா பெர்னாண்டஸ் தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். எஸ். பார்த்தசாரதி, சம்சுதீன், முருகேசன், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் பேசியது: கன்னியாகுமரியிலிருந்து 80 கிமீ தொலைவில் தூத்துக்குடி துறைமுகத்தை ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ தொலைவில் கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் சரக்கு பெட்டகமாற்று முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மிகச்சிறிய மாவட்டமான குமரியில் சரக்கு பெட்டகமாற்று முனையம் அமைக்க எந்த சாத்தியமும் இல்லை. இதைமீறி இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
இந்நிலையில் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையின் போது சரக்கு பெட்டக மாற்று முனையம் குறித்த அறிவிப்பு இருக்காது என நம்புகிறோம் என்றார் அவர்.
கூட்டத்தில் பங்குத்தந்தைகள் ஜோசப் ரொமால்ட், ராஜன் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.