குலசேகரம் அருகே மது அருந்தி விட்டு சாலையில் சென்ற வாகனங்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை இளைஞர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக சனிக்கிழமை காலை திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அவரை தூத்துக்குடி நண்பர்கள் இருவர் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஒரு காரில் அழைத்துக் கொண்டு திற்பரப்பு அருவிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து, திரும்பிச் செல்லும் போது குலசேகரம் பகுதியில் சாலையில் சென்ற இரு சக்கர வாகனங்கள் மீதும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீதும் இவர்கள் ஓட்டிச் சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர். இதில் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து குலசேகரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காரை பறிமுதல் செய்து, அதிலிருந்த த இருவரையும் பிடித்துச் சென்றனர். கார் ஓட்டுநர் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றாராம். இந்நிலையில் காரை போலீஸார் பறிமுதல் செய்த இடத்தின் அருகிலுள்ள ஒரு ரப்பர் உலர் கூட்டத்தின் கூரையில் ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து போலீஸார் அங்கு சென்ற போது, தூத்துக்குடி இளைஞர்கள் வந்த காரின் ஓட்டுநர் என்பதும், போலீஸாருக்கு பயந்து ஓடியபோது வழி தெரியாமல் பாக்கு மரம் வழியாக ஏறி ரப்பர் உலர் கூடத்தின் கூரையில் ஏறி பதுங்கி இருந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து கார் ஓட்டுநரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.