கடந்த ஆண்டில் தென்மண்டலத்தில் 350 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் சுங்கத் துறை ஆணையர் ரஞ்சன்குமார் ரவுத்ரி.
கன்னியாகுமரி, குலசேகரன்பட்டினம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள சுங்கத் துறை அலுவலகங்களின் மின்தேவையை நிறைவுசெய்யும் வகையில், இந்த அலுவலகங்களில் ரூ. 4.60 லட்சத்தில் 10 கி.வா. திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு, இதற்கான தொடக்க விழா கன்னியாகுமரி சுங்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதை, சுங்கத் துறை திருச்சி மண்டல ஆணையர் ரஞ்சன்குமார் ரவுத்திரி தொடங்கி வைத்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை கையாள்வது தொடர்பான நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக உள்ளது. கடத்தல் வழக்குகளில் தொடர்பில்லாதவர்களை தேவையில்லாமல் விசாரிப்பதோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ இல்லை. கடந்த ஆண்டில் தென்மண்டலத்தில் தங்கம், வெளிநாட்டுப் பணம், மதிப்புமிக்க கடல்வாழ் உயிரினங்கள் கடத்தல், போதைப்பொருள்கள் உள்ளிட்டவை தொடர்பான 350 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல்பகுதியை கண்காணிப்பதற்காக 14 அதிநவீன ரோந்து படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் குற்றங்கள் கட்டுக்குள் உள்ளன என்றார் அவர்.
பேட்டியின்போது, துணை ஆணையர்கள் முகமது நெளபல், ராஜ்குமார் மோசஸ் ஆகியோர் உடனிருந்தனர்.