மாநில கால்பந்து: விருதுநகர் மாவட்ட அணி முதலிடம்

கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விருதுநகர் மாவட்ட கால்பந்து அணி முதலிடம் பிடித்தது.


கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விருதுநகர் மாவட்ட கால்பந்து அணி முதலிடம் பிடித்தது.
கோவில்பட்டி கால்பந்துக் கழகத்தின் 30ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. கால்பந்துக் கழகத் தலைவரும், ஓய்வுபெற்ற சுங்க இலாகா துறை கண்காணிப்பாளருமான நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இறுதிப் போட்டியில் விருதுநகர் மாவட்ட கால்பந்து அணியும், திருநெல்வேலி மாவட்ட அணியும் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் விருதுநகர் மாவட்ட அணி வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது பரிசுக்கான போட்டியில், தூத்துக்குடி மாவட்ட அணியும், மதுரை மாவட்ட அணியும் மோதின. இதில், 3- 2 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வென்று 3ஆவது இடத்தைப் பிடித்தது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரிச் செயலர் கண்ணன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தார். முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்ட அணிக்கு வீர விடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் விஜி, 2ஆம் இடம் பெற்ற நெல்லை மாவட்ட அணிக்கு பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் சீனிராஜ், 3ஆம் இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்ட கால்பந்து அணிக்கு உடற்கல்வி ஆசிரியர் சங்கிலிராஜன், 4ஆம் இடம் பிடித்த மதுரை மாவட்ட அணிக்கு கால்பந்துக் கழகத் துணைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.
கால்பந்துக் கழகச் செயலர் தேன்ராஜா வரவேற்றார். கால்பந்துக் கழக ஜூனியர் கேப்டன் சுபாஷ்ராஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com