சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தூய்மையே சேவை திட்டத்தில் திங்கள்கிழமை ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மகாத்மா காந்தி 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மையே சேவை திட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் வீதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மற்றும் மரக்கன்று நடும் விழா, பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வைகுண்டரமணி தலைமையில், முதலூர் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், சுகாதார மஸ்தூர் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஒட்டுமொத்த துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் பணியை அரசு மருத்துவர் சிவகாமி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இதில் மருத்துவ அலுவலர்கள் மேரி ரீனா, வைகுண்டரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்து புங்கை, சீத்தா, வாதுமை ஆகிய மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜன், செவிலியர்கள் ஞானசெல்வி, பரமேஸ்வரி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் சித்திரைராஜன் நன்றி கூறினார்.