ஜெயலலிதா பிறந்தநாள்: நல உதவிகள் வழங்கி கொண்டாட அதிமுக கூட்டத்தில் முடிவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் அமலிராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலர் என். சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும், ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம் வழங்கியும் கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ஜெபமாலை, எம்ஜிஆர் மன்றச் செயலர் செல்லத்துரை, வழக்குரைஞர் பிரிவு செயலர் யு.எஸ். சேகர், இளைஞரணிச் செயலர் தளபதி பிச்சையா, மேற்கு பகுதி செயலர் ஏ. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.