பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் சார்பில் கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும், 3ஆவது ஊதிய மாற்றத்தை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை வழங்க வேண்டும், ஓய்வூதியப் பங்களிப்பை அரசு விதிப்படி முறைப்படுத்திட வேண்டும் என்பன உ ள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
இதையடுத்து, கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சஞ்சார் நிகாம் எக்ஸிகியூட்டிவ் அசோசியேஷன் உதவித் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சங்கரநாராயணன், சிந்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க பாலசிங், ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தினால், பி.எஸ்.என்.எல். அலுவலக வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டிருந்தது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலகம் வந்துவிட்டு, மூடப்பட்டு இருந்ததைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.