தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, வீட்டுமனைப் பட்டா, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தினர் அளித்த மனு விவரம்:
முடிதிருத்தும் தொழில் செய்து வரும் தங்களுக்கு கிடைக்கும் வருமானம் அன்றாட வாழ்க்கைக்கு சரியாக இருக்கிறது. நாங்கள் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை அல்லது தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவி கேட்டு மனு: தூத்துக்குடி கலவரத்தில் காயமடைந்த கருணாநிதிநகரைச் சேர்ந்த விஜயகுமார் தரப்பில், அவரது தாய் பிரம்மசக்தி அளித்த மனுவில், கலவரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வலது காலில் எலும்பு உடைந்து பாதிக்கப்பட்டான். அவனை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தோம். தற்போது அவனுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஏற்கெனவே செய்த சிகிச்சைக்கு எந்தவித நிதியும் வழங்கப்படவில்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே உயிருக்கு போராடும் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.