விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, புதன்கிழமையும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்கியது. வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களையும், உறுதிமொழி படிவங்களையும் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 5 பேரும், இரண்டாம் நாளான புதன்கிழமை 3 பேரும் வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் இரண்டு நாள்களிலும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.